தண்ணீர் சேமிப்பு அல்லது பாதுகாப்பு

 

பஞ்சபூதங்களில் முதன்மையானதும் முக்கியமானதுமான நீரைப் பற்றியதுதான் இந்த கட்டுரை.

          நீரின்றி அமையாது இவ்வுலகம்

என்ற திருக்குறளின் ஒரேயொரு வரியிலேயே தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர முடிகிறது. மற்ற எந்த கிரகங்களிலும் இல்லாத ஒரு சிறப்பு நம் பூமிக்கு மட்டும் உண்டெனில் அது மிகையாகாது.

     நாம் வாழும் இப்பூமி மூன்று பங்கு நீரினாலும் ஒரு பங்கு நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் இந்த மூன்று பங்கு நீரும் மனித வாழ்க்கைக்கு உகந்ததா எனில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

மனிதனின் உடலிலும் 75% நீர் தான் உள்ளது. நம் உணவில் உள்ள சத்துகளை தேவையான உறுப்புகளுக்கு எடுத்துச் செல்லவும் , கழிவை கழிவு உறுப்புகளுக்கு அனுப்பவும் நீர் அவசியமாகிறது. ஒரு மனிதனின் உடலில் 42 லிட்டர் தண்ணீர் உள்ளது,. அதில் 2.7 லிட்டர் என்னும் மிகச் சிறிய அளவு குறைந்தாலும் (Dehydration)  உடலில் எரிச்சல், நடுக்கம், தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படும். அது போல நம் சுற்றுப்புறம் தூய்மையாக அமையவும் நீர் அவசியமாகிறது.

நீர் எனும் அமுதம் பெரும்பாலான பொருட்களின் தயாரிப்பில் மிக முக்கியமான மூலப்பொருளாகும். பெருகி வரும் மக்கள் தொகை என்பது ஒருபுறம் இருக்க தொழில் புரட்சியினால் மறைநீரின் தேவையும் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் தண்ணீர் சேமிப்பு அல்லது பாதுகாப்பு என்பது இன்றைய அனைவருக்கும் பெரிய சவாலாகவே உள்ளது. மூன்றாம் உலகப்போர் மூள்வதாக இருந்தால் அது இந்த நீல தங்கத்திற்காகத் தான் இருக்கும்.

     நீரை சிக்கனமாக ஆள்வது மட்டும் நம் கடமையல்ல நீர் ஆதாரத்தை பெருக்குவதும் நம் கையில் தான் உள்ளது. அதற்கு  நம்மால் இயன்ற அளவு வீட்டிற்கு ஒரு மரத்தை நட்டு வைப்போம். ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தினை கடைப்பிடிப்போம். இயன்ற அளவு நீர் நிலைகளை பாதுகாப்போம்.

நீரின் உபயோகத்தை குறைத்து மறுசுழற்சி முறையில் தேவையற்ற நீரை தயாரிப்புக்கும், சுத்தம் செய்வதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்துவோம்.நெகிழிப் பொருட்களை புறக்கணிப்போம். தென்னை பனையோலைப் பொருட்களையும், மண்பாண்டம், சில்வர் பாத்திரங்களையும் உபயோகிப்போம். காய்கறி கழிவுகளை உரமாக்குவோம். மக்கும் குப்பைகளையும் மக்காத குப்பைகளையும்  தரம் பிரித்து போடுவோம்.

     குழந்தைகளிடம்  நீரின் அத்தியாவசியத்தையும், அதை பயன்படுத்தும் முறை மற்றும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும். இன்றே உணர்த்த ஆரம்பிப்போம். இன்றேல் கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஆறுகள் மூடப்பட்டு மனித குடியிருப்புகளாய் மாறிவரும் இவ்வேளையில் நம் வருங்கால சந்ததியினர் இவற்றையெல்லாம் (கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஆறுகள்) வெறும் புகைப்படங்களாக மட்டுமே பார்க்க வேண்டிய அபாயம் ஏற்படும்.

            நீர் சேமிப்பு முறை என்பது ஊர்த் திருவிழா போல வருடத்திற்கு ஒரு சில நாட்கள் என வழக்கமாக இல்லாமல், தினம் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கமாக்கிக் கொள்ள  வேண்டும். இயற்கையின் ஒவ்வொரு அசைவும் ஒரு சமிக்ஞை.அதை சரியாகப் புரிந்துகொள்ளநாம் தாம் தவறிவிட்டோம்.இன்று உள்ள இந்த அபாயகரமான சூழ்நிலை ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. சிறிது சிறிதாக சேர்ந்து பூதாகரமாக மாறி நமை அச்சுறுத்தி வருகிறது. அதை மாற்றும் சக்தியும், திறமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது. அதற்கான முயற்சியை இன்றே தொடங்குவோம்.

தினமும் ஒரு சில துளிகளாவது தண்ணீரை சேமிப்போம். சிறுதுளியே பெரும் வெள்ளமாகும் விரைவில் !ஊர் கூடி தேர் இழுப்போம்! மழை நீரை சேகரிப்போம் ! நம் மண்ணின் வளத்தை பாதுகாப்போம் ! மழை நீர் நம் ஒவ்வொருவரின் உயிர்நீர்!

                 வாழ்க நன்னீர் வளமுடன்.

குறிப்பு:

 DEHYDRATION உடல் நீர் வறட்சி

 மறை நீர் (Virtual water) என்பது ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் ஆகும்.

நீல தங்கம் தண்ணீர்.

நெகிழி  – PLASTIC

 உயிர்நீர் இரத்தம்

இப்படிக்கு உங்கள் தோழி
இரா.அலமேலு ( முதுகலை தமிழ் இலக்கியம் )
நிர்வாக அதிகாரி (A O )
MM DIAGNOSTICKS CENTRE , Chennai - 49